Friday, April 17, 2026

"36" (இருள்-வெளி-ஒளி) - 4 - தில்லை செந்தில்பிரபு

  "36" (இருள்-வெளி-ஒளி) - 1

மாயை - கதிர் வரும் வரை சுடர் விளக்கு

“இந்த உலகம் உண்மையானதா? அல்லது வெறும் தோற்றப் பிழையா?” – ஆன்மீகத் தேடலில் இருப்பவர்களைத் தடுமாறச் செய்யும் வினா இது.

ஆனால் சைவ சித்தாந்தம் இதற்குத் தர்க்கரீதியான ஒரு தெளிவைத் தருகிறது:

“மாயை என்பது பொய் அல்ல; அது ஒரு மூலப்பொருள். இந்த உலகம் கனவு அல்ல; அது ஒரு கட்டுமானம்.”

இருட்டறையில் இருப்பவனுக்குச் சூரியன் வரும் வரை ஒரு சிறு தீபம் எப்படித் துணையாக இருக்குமோ, அதுபோலவே ஆணவ இருளில் மூழ்கியுள்ள ஆன்மாவிற்குப் பக்குவம் வரும் வரை துணையாக இருப்பது ‘மாயை’ எனும் கருவியே.

படைப்பு தொழில்

ஐந்தொழில் - படைத்தல் ( ஆக்கல் )

உயிர் அறிவினை துணையாகக்  கொண்டு செயல்படக்கூடியது . ஆனால் தனித்த உயிருக்கு அறிவு உண்டாவதில்லை . அது அதனை பெற உடம்பு என்கிற ஜடம் தேவைப்படுவதாய் இருக்கின்றது. தன் ஆன்ம வளர்ச்சிக்கு தேவைப்படும் அறிவின் கருவியாக இருக்கிற உடம்பை தனக்குத் தானே உண்டுபண்ணிக்கொள்கிற வல்லபமும்  உயிருக்கு  இல்லை . உயிரோடு தன்னை உட்படுத்திக்கொள்ளும் வல்லபம் ஜடத்துக்கும் இல்லை . ஜடம் உயிருக்கு அறிவார்ந்து செயல்படுவதற்கான தன்மையை வழங்குமே  ஒழிய  அந்த ஜடம் அறிவற்றது . இந்த இக்கட்டான நிலையில் தான் ஜடத்தையும் உயிரையும் ஒன்று சேர்க்க ஒரு கர்த்தா தேவைப்படுவதாய் இருக்கிறார் . அவர் எப்படியானவராக இருக்கிறார் என்று யோசிக்கும் போது உயிரை போல தன்னிச்சையாக சிந்திக்கும் அறிவற்றவராக இல்லாமல் தானே பேரறிவாளராக இருக்கிறார் . ஜடத்தோடு தானே சேர்ந்து கொள்ள முடியாத  உயிராக இல்லாமல் . ஜடத்தை தனக்கு வேண்டிய வண்ணம் ஆக்குபவராயும் அதனுள் உயிரை புகுத்துபவராயும் சர்வ வல்லவராய் இருக்கிறார் . சைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மையில் உயிரை விடவும் , மலங்களை விடவும் எண்ணுதற்கு எட்டாத உயர் நிலையில் இறைவன் இருக்கிறான் . அவன் அருள் சக்தி ரூபமாய் வெளிப்பட்டு கர்த்தாக்களை உண்டு பண்ணி இந்த உயிரை  உடம்போடு சேர்த்து இந்த உடம்போடான உயிரை உலகத்தில் சேர்த்து அவர் செய்கிற முதல் க்ரித்தியம் தான் படைப்பு . 

துரியம் கடந்த சுடர் 8 - ஆதியந்தமில் அரும்பெருஞ்சோதி

[1]

1863 ஆம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி. இருபத்து ஒன்பதே வயதான ஒரு பிரிட்டிஷ் நிலவியலாளர் ஒருவர் தான் இருந்த ராணுவ குடியிருப்பு மைதானத்தில் உலவிக் கொண்டிருந்தார். அந்த மைதானத்தில் ஏதோ ராணுவ நிகழ்வுகளுக்காக ஆழமான குழிகள் தோண்டப்பட்டிருந்தன. அவற்றில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணும், கற்களும் குழிகளுக்கு அருகிலேயே குவித்து வைக்கப்பட்டிருந்தன. இயல்பாக வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தவரிடம் அந்த கற்களில் ஒன்று தன்னை கையில் எடுத்து பார்க்குமாறு கூறியது. கையில் எடுத்தவருக்கு உடனடியாக ஒன்று புரிந்தது, தன்னிடம் பேசியது கல் அல்ல, தன் தொல் மூதாதை ஒருவர் என. ஆம், அது சாதாரண கல் அல்ல. அது மானுடம் செய்த தொல் பழங்கால கருவி. இயல்பிலேயே நிலவியலாளரான அவருக்கு நிலத்தை தோண்டி ஆழம் செல்கையில் வரும் நில அடுக்குகள் பற்றியும், அந்த அடுக்குகளை முன்வைத்து காலத்தைக் கணிக்கும் முறையும் தெரிந்திருந்ததில் வியப்பில்லை தான். ஆனால் கூடுதலாக அவருக்கு அந்த காலகட்டங்களில் உலகில் கண்டடையப்பட்ட தொல் பழங்கால கற்கருவிகளைப் பற்றிய தொடர் வாசிப்பும் இருந்தது. அந்த 1863 ஆம்  வருடத்திற்கு ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு தான் பிரான்ஸின் ‘ஸேய்ன்ட அஸ்ஷுள்’ என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான கற்கருவிகள் கண்டடையப்பட்டிருந்தன. கற்கைக்கோடரிகள் (Hand-Axes), கல்வெட்டிகள் (Cleavers) என அவை வகைப்படுத்தப்பட்டிருந்தன. இவை பொதுவாக ‘அஸ்ஷுளியன் கருவிகள்’ என்றே அழைக்கப்பட்டன. இவற்றையெல்லாம் அறிந்திருந்த அவருக்கு தன் கையில் இருப்பது ஒரு அஸ்ஷுளியன் கைக்கோடரி தான் என முடிவெடுப்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. அது கிடைத்த ஆழத்தில் இருந்த நில அடுக்கை வைத்தும், அந்த கைக்கோடரியின் அமைப்பை வைத்தும் அது மிக மிகத் தொன்மையான, இன்றைக்கு சுமார் இருபத்தைந்து லட்சம் வருடங்களுக்கு முன் துவங்கி பதினோராயிரம் வருடங்கள் வரை நீண்ட பழங்கற்காலத்தைச் சார்ந்தவை அக்கருவிகள் என மதிப்பிட்டார் அவர். அது சர்வ நிச்சயமாக ஒரு மாபெரும் வரலாற்று தருணம். இன்றிருப்பது போல தகவல்கள் விரல்நுனியில் இருந்த காலமன்று அது. அதுவும் இது போல தொல்லியல் சார்ந்த தகவல்கள் மிக மிகக் குறுகிய வட்டத்தில் மட்டுமே பகிரப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்ட காலம். அதுவும் ஐரோப்பாவில் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அத்தகைய ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து ஒருவர் நம் பாரதத்திற்கு வருவதும், அவர் கண்ணில் அத்தகைய ஒரு கல் படுவது என்பதும் ஒரு தெய்வம் நிச்சயம் செய்த கணமாகத் தானே இருக்க முடியும்!! எனவே தான் தன்னை மற்றொரு கல்லென கடந்து சென்ற எத்தனையோ மானுடர்களில் இவரை குறிப்பாக தெரிவு செய்தார் அந்த தொல்மூதாதை. “முன்னறியா என் தொல் மூதாதை ஒருவரோடு கை குலுக்கியது போல் உணர்ந்தேன்” என்றே பின்னாளில் அந்த கணத்தை நெகிழ்வுடன் நினைவுகூர்ந்தார் அவர். அந்த கணத்தில் பாரதம் இப்புவியின் மானுட பரிணாமத்தில் தன்னுடைய இடத்தை அழுத்தம் திருத்தமாக பதித்தது. அந்த கணத்தை நிகழ்த்திய அந்த மாமனிதர் பிரிட்டிஷ் நிலவியலாளரான சர். ராபர்ட் புரூஸ் ஃபூட். மிகச் சரியாக இந்திய தொல்லியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார் அவர். அவர் அந்த கல்லை கண்டுபிடித்த இடம் தருமமிகு சென்னையில் இருக்கும் பல்லாவரம். ஆம், நம் தமிழகம் தான். அந்த கைகோடரியை இன்றும் சென்னை எழும்பூரில் இருக்கும் அருங்காட்சியகத்தின் தொல்லியல் பகுதியில் காணலாம். அவர் பல்லாவரத்தில் கண்டுபிடித்த கருவி ஒரு துவக்கம் தான். அவர் தன் சக நிலவியலாளரான வில்லியம் கிங் என்பவருடன் இணைந்து சென்னைக்கு அருகில், கொசஸ்தலை ஆற்றின் படுகையில் இருக்கும் அதிரம்பாக்கம் என்னுமிடத்தில் அகழ்வாய்வு செய்து பல நூறு தொல்கற்காலக் கற்கருவிகளைக் கண்டுபிடித்தார். மிக விரிவாக இந்த கருவிகளை ஆராய்ந்த அவர் அக்கருவிகளின் உருவாக்கத்திற்கும், வடிவத்திற்கும் அது வரை உலகில் கண்டடையப்பட்ட பிற கற்கருவிகளுக்குமான வேறுபாடுகளை முன்வைத்து அவற்றின் தனித்துவத்தை நிரூபித்தார். மேலும் அதிரம்பாக்கத்தில் கிடைத்த கருவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், அங்கு கிடைத்த இக்கருவிகள் உருவாக்கத்தின் போது மீந்த கல் கழிவுகளை வைத்தும் அவர் அதிரம்பாக்கத்தில் அந்த கருவிகள் உருவாக்கும் தொழிற்சாலை இருந்திருக்கக் கூடும் என்ற முன்கோளையும் முன்வைத்தார். இந்த இரு கூறுகளைக் கொண்டு அவ்விடத்தில் ஒரு மிகத் தொன்மையான தொல் கற்கால பண்பாடு இருந்திருக்கிறது என்று நிறுவினார் அவர்.

தொன்மையான பண்பாடு என்பது சரி, ஆனால் எவ்வளவு தொன்மை? அதை ராபர்ட் அறுதியாகச் சொல்லவில்லை. அவர் இந்த கருவிகள் பழங்கற்காலத்தைச் சார்ந்தவை என்று மட்டுமே சொன்னார். பழங்கற்காலம் என்பது சில லட்சம் ஆண்டுகள் நீடித்த ஒரு காலம். எனவே அந்த கற்கருவிகளின் சரியான ஆண்டு எது என்பது சில காலம் தெரியாமலேயே இருந்தது. 1930களில் டி. டி. பீட்டர்சன் மற்றும் ஹெச். தெ டெர்ரா என்ற இரு யேல் பல்கலைக்கழக அகழ்வாய்வாளர்கள் இந்த கற்கருவிகளை, இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் ஸோன் நதிப் பள்ளத்தாக்கில் கண்டறியப்பட்ட கற்கருவிகளோடு ஒப்பிட்டு இவை ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவை என வரையறுத்தனர். அவர்களே ராபர்ட் ப்ரூஸ் கண்டடைந்த இந்த பண்பாட்டிற்கு ‘மதராஸியன் கல்சர் – மதராஸ் பண்பாடு’ என்ற பெயரையும் அளித்தனர்.

துரியம் கடந்த சுடர் 1




ஆனந்த ஆடல் - கோமதி சூரியமூர்த்தி

சைவ சமயத்தின் முக்கிய விழா – ஆருத்ராதரிசனம்

சைவ சமயத்தின் முக்கிய விழா ஆருத்ராதரிசனம். ஆருத்ரா தரிசனம் என்றாலே சிதம்பரம் நடராசப் பெருமான் நினைவு வரும். திருவாதிரையில் நடராசரை வழிபட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது.

எவ்வாறு கார்த்திகை விளக்கீடு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் இடம் திருவண்ணாமலை என்று கருதப்படுகின்றதோ, அதுபோல மார்கழித் திருவாதிரை நாள் சிறப்பாகக் கொண்டாடப்படும் இடம் சிதம்பரமாகும்.

இச்சிதம்பர நடராசர் மீது குமரகுருபரர் பாடிய நூல்கள் சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பர செய்யுட் கோவை என்ற இரண்டாகும். இவ்விரு நூல்களின் துணை கொண்டு குமரகுருபரர் கண்ட நடனம் காண்போம்.

சித்தாந்த வினா விடை - 8 - அருணைவடிவேல் முதலியார்


பொருளியல்பு

மாணவன்: பதி, பசு, பாசம், எனப் பொருள்கள் மூன்று உள்ளன என்பதற்குப் பிரமாணம் கூறினீர்கள். இனி, அப் பொருள்களின் இலக்கணங்களை கூறுங்கள்.

ஆசிரியர்: ‘இலக்கணம்’ என்றாலும், ‘இயல்பு’ என்றாலும் ஒன்றே. ஒவ்வொரு பொருளுக்கும், பொதுவியல்பு, சிறப்பியல்பு என இரண்டு இயல்புகள் உள்ளது. இந்தப் பொது-சிறப்பு இயல்புகள், அளவையிலில் கூறிய பொது சிறப்பு இயல்புகள் அல்ல.

அளவியலில் ‘பல பொருள்களுக்குப் பொதுவாய் உள்ள இயல்பு பொதுவியல்பு’ என்றும், ‘ஒரு பொருளுக்குமட்டும் சிறப்பாய் உள்ள இயல்பு சிறப்பியல்பு’ என்றும் முன்னர் சொல்லப்பட்டன. இனி சித்தாந்தத்துள் ‘ஒரு பொருளுக்கு அதன் தன்மையிலே இயல்பாய் என்றும் உள்ள இயல்பு சிறப்பியல்பு என்றும், மற்றொரு பொருளின் சார்பு காரணமாக ஒரு பொருள் உண்டாகி அச்சார்பு நீங்கிய உடன் அதன் தன்மை வந்துவிடும் இயல்பு பொதுவியல்பு’ என்றும் சொல்லப்படும்.

இவ்விரண்டு இயல்புகளும் முறையே, ‘சொரூப இலக்கணம்’ என்றும், ‘தடத்த இலக்கணம்’ என்றும் சொல்லப்படும். ஆகவே, சித்தாந்தத்துள் சொல்லப்படும் சிறப்பியல்பு, பொதுவியல்பு என்பது வேறுபட்டவை.