முத்தர் அறுபத்து மூவர் பணிந்தேத்தும்
சித்தர் வனந் தில்லைச் சிற்றம்பலவா - பத்தர்
பவ இருளை நீக்கி அருள் பானுவே! துய்ய
தவவடிவே நின்தாள் சரண்
சிற்றம்பலநாடிகள் அருளிய நூல்கள்
சிற்றம்பல நாடிகள் சாத்திரக் கொத்து என்ற ஒரு நூல் திரட்டு ஏட்டுச் சுவடிகளில் உள்ளது. அதை முதன் முதலில் திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை 1904 ஆம் ஆண்டு அச்சிட்டார். பொதுவாக வழங்கும் சிற்றம்பல நாடிகள் வரலாறு அந்நூல் முகவுரையில் அவர் எழுதியதே ஆகும். இச்சாத்திரக் கொத்து ஒன்பது பிரிவுகளை உடையது. இவற்றுள் சிற்றம்பல நாடிகள் பாடியனவும் அவர் மாணவர்கள் பாடியனவும் அடங்கியுள்ளன.
சாத்திரக் கொத்திலுள்ள நூல்கள்
துகளறு போதம்
செல்காலத்திரங்கல்
வருகாலத்திரங்கல்
நிகழ்காலத்திரங்கல்
சிற்றம்பலநாடிகள் அனுபூதி விளக்கம்
சிற்றம்பலநாடிகள் தாலாட்டு
சிற்றம்பலநாடிகள் வெண்பா
சிற்றம்பலநாடிகள் கட்டளைக் கலித்துறை
திருப்புன் முறுவல் என்பன.
இவற்றுள் துகளறு போதம், இரங்கல் மூன்று, திருப்புன் முறுவல் ஆகிய ஐந்தும் சிற்றம்பல நாடிகள் பாடியவை. மற்ற நான்கும் அவருடைய மாணவர்கள் பாடியவை என்று சொல்லப்படுகிறது. (தமிழ் இலக்கிய வரலாறு பொ.ஆ.பி. 14ஆம் நூற்றாண்டு மு. -அருணாசலம் எம்.ஏ, பக்கம்185,186)
துகளறு போதம்
இந்நூல் மதுரை சிவப்பிரகாசர், திராவிட மாபாடியம் செய்த சிவஞான சுவாமிகள் போன்ற சிறந்த சித்தாந்த உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பெற்ற பெருமை உடையது. கற்பக விநாயகர் காப்புச் செய்யுளும், 100 வெண்பாக்களும், இறுதியில் நூற்பொருள் கூறும் இரு பிற்கால வெண்பாக்களும் உள்ளன. சிறப்புப்பாயிர அகவல் ஒன்றும் நூற்பொருளும் செய்யுள் தொகையும் கூறும் அகவல் ஒன்றும் உள்ளன.
சைவ சித்தாந்தத்தில் தசகாரியம் என்பது,
தத்துவ ரூபம்,
தத்துவ தரிசனம்.
தத்துவகத்தி,
ஆன்ம ரூபம்,
ஆன்ம தரிசனம்,
ஆன்ம சுத்தி,
சிவ ரூபம்,
சிவதரிசனம்,
சிவயோகம்,
சிவபோகம்
என சாத்திர நூல்கள் கூறும். இவற்றை சில சாத்திரங்கள் முப்பது நிலைகளாகத் தொகுத்துக் கூறும். இவ்வாறு கூறும் முதல் சாத்திரம் துகளறு போதம். நூற்பெயரின் பொருள், ஆன்மாவிடத்தில் உள்ள துகளாகிய தொல்லை மலம் அறுவதற்கு ஏதுவாகிய துகளறு போதம் என்னும் சிவஞானத்தை விளைவிப்பதாகும்.
இந்நூலின் வெண்பாக்கள் சித்தியார், உண்மைவிளக்கம் போன்ற முந்தைய சாத்திரங்களின் கருத்தையும் மொழியையும் எடுத்தாளுகின்றன. "திருவருளைப் பெற்று அனுபவித்த அடியார் வாக்கு" என்று மதுரை சிவப்பிரகாசர் சிற்றம்பல நாடிகளைப் போற்றிக் கூறி இருக்கிறார்.
சிற்றம்பலநாடிகள் சரியையாகிய தாச மார்க்கத்தைக் கூறும்போது திருவலகு, திருமெழுகு, திருவிளக்கு என்பவற்றைச் சொல்லிய பின் சிவபெருமானுக்குப் புதிய கோயில் எடுப்பவர்களும் சீரழிந்த பழைய கோயில்களைப் புதுப்பிப்பவர்களும் சிவலோகம் அடைவார்கள் என்று ஒரு புதிய பணியையும் சேர்த்து சொல்கிறார்.
சிற்றம்பல நாடிகளின் காலம் 1325 - 1350 என்று குறிப்பிட்ட அருணாசலம் அவர்கள் 1310 இல் டில்லி சுல்தானின் படைத்தலைவனாகிய மாலிக்காபூர் என்பவன் மதுரையின் மீது படையெடுத்துச் சென்று அழித்ததை அறிந்த சிற்றம்பல நாடிகள் மனம் வருந்தி திருக்கோயில் சீரமைப்புப் பணிகளையும் சேர்த்து செய்திருப்பார் என்று கருதுகிறார்.
குருபூஜை
ஒவ்வொரு சித்திரை திருவோணத்தன்றும் சிற்றம்பல நாடிகளின் குருபூஜையும் அவர் சீடர்களுடன் சமாதியடைந்த நிகழ்வும் சித்தர்காடு ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றன.
கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு
0 comments:
Post a Comment